பொதுமக்களுக்கு உயர்தர, தரப்படுத்தப்பட்ட மருந்துகளை தொடர்ந்து வழங்குவதையும், அத்தகைய மருந்துகள் திறந்த சந்தையில் நியாயமான விலையில் தொடர்ந்து கிடைப்பதையும் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு சுகாதார அமைச்சு உறுதிபூண்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கீழ் இயங்கும் தேசிய மருந்துகள் தொடர்பான ஆலோசனைக் குழு மற்றும் தேசிய மருந்துகள் தொடர்பான மேன்முறையீட்டுக் குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒரு குறிப்பிட்ட அளவு இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்படுவதாகவும், ஏனையவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் சிலவற்றிலிருந்து மருந்து நிறுவனங்கள் அதிகளவில் இலாபம் ஈட்டியுள்ளன என்பதும் இந்தக் குழுக் கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது.
இதன்போது, நாட்டில் மருந்து மாபியா ஒன்று இயங்கி வருவதாகவும் குழு உறுப்பினர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.
இந்த இரண்டு குழுக்களிலும் சுகாதாரத் துறை மற்றும் அவர்களின் தொழில் குறித்து நல்ல அறிவைக் கொண்ட நிபுணர்களை உறுப்பினர்களாக நியமிப்பதன் முதன்மை நோக்கம், மருந்துத் துறையில் இதுபோன்ற முறையற்ற நடைமுறைகள் இடம்பெறுவதற்கு இடமளிக்காமல் இருப்பதை உறுதி செய்வதாகும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.