வடக்கில் படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை படிப்படியாக விடுக்க தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார்.
வடக்கு ஆளுநர் செயலகத்தில் நேற்று(05) இடம்பெற்ற காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருடனான கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு கூறினார்.
காணி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை உணர்வுபூர்வமான விடயமெனக் கூறிய அவர், மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவதாகவும் தெரிவித்தார்.
காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மாறாக தான் ஒருபோதும் நடந்து கொள்ளப்போவதில்லையெனவும்,காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கு ஒருபோதும் தயாரில்லை எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படவேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு எனச்சுட்டிக்காட்டிய ஆளுநர், அந்த நிலைப்பாட்டையே தாமும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டார்.
Link : https://namathulk.com