இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையான பணி எனவும், அந்த திட்டத்திற்கு ஏற்ப கல்வியை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்போன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது, இந்த நாட்டின் மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கும், மாற்றுத்திறனாளி சமூகத்தின் நலனை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பதாக நிப்போன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவா தெரிவித்தார்.
குறிப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு ஆதரவை வழங்க தனது அமைப்பு எதிர்பார்ப்பதாகவும் நிப்போன் மன்றத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
இந்த நாட்டின் கிராமப்புற மக்களிடையே வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக விசேட திட்டங்களை தொடங்க எதிர்பார்ப்பதாகவும் நிப்போன் மன்றத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
Link : https://namathulk.com