தென்னை உள்ளிட்ட ஏனைய விவசாயப் பயிர்களில் வெள்ளை ஈ தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரைவிடுத்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் விவசாயத்துறையினர் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிய வெள்ளை ஈ தாக்கம் தற்போது மீண்டும் வரத் தொடங்கியுள்ளதாகவும், குளிரான காலநிலை காரணமாக அதன் தாக்கம் குறைவடைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அது பரவத் தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தால் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் இதன்போது குறிப்பிட்டார்.
தென்னை மரங்களில் பரவும் வெள்ளை ஈ தாக்கத்தை தம்மால் கட்டுப்படுத்துவது சவாலானது எனவும் அதற்கு தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் தெரிவித்தார்.
அதேநேரம், ஏனைய விவசாயப் பயிர்களில் பரவும் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த இரசாயன முறையைப் பின்பற்றுவதாகவும் விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கூறினார்.
அதற்கான உதவிகளை வடக்கு மாகாண விவசாய திணைக்களம் ஊடாக வழங்குவதாக, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இதன்போது உறுதியளித்தார்.
தென்னை பயிர்ச் செய்கை சபையினரையும், தென்னை பயிர்ச்செய்கை ஆராய்ச்சி சபையையும் அழைத்து விரைவில் சந்திப்பு நடத்தி இதனைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டை துரிதமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.

Link: https://namathulk.com