மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் போராட்டங்களூக்கும் கட்சியின் பூரண ஓத்துழைப்பு கிடைக்கும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களினால் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, தையிட்டி விகாரை எந்தவிதமான சட்ட ரீதியான அனுமதிகள் எதனையும் பெற்றுக்கொள்ளாமல், மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டினார்.
மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தம் எனும் திடமான சிந்தனையின் அடிப்படையில், வடக்கு கிழக்கு பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தினாலும், வனவளத் திகை்களத்தினாலும் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கும் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
அவ்வாறான நிலையில், கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக செயற்பட்டிருந்த கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த காணி உரிமையாளர்கள் தங்களின் காணி விடுவிப்பு தொடர்பான கோரிக்கையை முன்வைத்ததாகவும், அதனடிப்படையில் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு, இதற்கான உடன்பாடும் எட்டப்பட்டிருந்ததாகவும் ஊடகச் செயலாளர் கூறினார்.
இதனடிப்படையில், முதற்கட்டமாக விகாரைக்கான கட்டுமானங்கள் அமைக்கப்பட்டிருந்த சிறிய பகுதியை தவிர, ஏனைய காணிகளை உரிமயாளர்களிடம் கையளிப்பதற்கு சம்மந்தப்பட்ட தரப்புக்கள் இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இந்நிலையில் காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எம்மவர்கள் சிலர் மத்தியில் காணி அளவீட்டின் நோக்கம் தொடர்பான புரிதல் இன்மை காணரமாக அளவீட்டு பணிகளை இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டதாகவும் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டினார்.
தற்போது அதிகாரத்தில் இல்லாத நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை தீர்ப்பதற்காக அழுத்தங்களை பிரயோக்கிக்க வேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் கூறினார்.
Link : https://namathulk.com