கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களும் முழுமையாக நன்மையடையும் வகையில் தமிழ்மொழி மூலமான பயிற்சி வகுப்புக்களை ஆரம்பிக்குமாறு ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி அறிவியல்நகரிலுள்ள ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமரை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சு.முரளிதரன் ஆகியோருடன், ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் அதிபர் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர்.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பெருமளவு இளைஞர் , யுவதிகள் ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் இணைய முடியாத நிலைமை காணப்படுவதாக மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மற்றும் ஆளுநர் ஆகியோர் சுட்டிக்காட்டினர்.
ஆங்கிலமொழி மூலமாக பயிற்சிகள் வழங்கப்படுதல் மற்றும் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் ஆங்கிலத்தில் சித்தியடைந்திருத்தல் என்பன தகைமையாக காணப்படுவதால் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் பலர் இணைய முடியாத நிலைமையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கருத்துத் தெரிவித்த பிரதமர், தமிழ் மொழி மூலமான பயிற்சிகளை ஆரம்பிக்குமாறு ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு பணிப்புரை விடுத்தார்.
கலந்துரையாடலை தொடர்ந்து, இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தை பிரதமர், ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.










Link: https://namathulk.com