ஊடகவியலாளர் எஸ்.தவசீலன் மீது தாக்குதல் முயற்சி – அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கண்டனம்

Aarani Editor
2 Min Read
எஸ்.தவசீலன்

சமூக நலனுக்காக ஊடக சேவையை முன்னெடுத்துவரும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அலுவலகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களின் உரிமைகள் நிறுவன மட்டத்தில் ஒடுக்கப்பட்டு மறுக்கப்படுகின்றன.

இந்நிலையில் களத்திலிருந்து பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு என்பதும் பாரிய சவாலாகவே உள்ளது.

நாளாந்த செய்திகளுக்கு அப்பால் சென்று சமூக சீர்கேடுகள் தொடர்பில் அறிக்கையிடும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு என்பது உறுதிசெய்யப்பட வேண்டும் .

அவ்வாறன சமூகவிரோத செயலை அறிக்கையிட சென்ற முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதினெட்டாம் போர்பகுதியில் சட்டவிரோதமான மணல் அகழ்வில் ஈடுபடுவோர் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

ஏ – 9 வீதியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் காட்டு பகுதியில் மணல் கொண்டு வந்து குவிக்கப்படுவதை காணொளி பதிவு செய்து கொண்டிருந்தபோது NP BFR 8429 மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் ஊடகவியலாளர் தவசீலனின் ஒளிப்படக்கருவியை பறிக்க முற்பட்டு ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டதோடு கொலை அச்சுறுத்தல் விடுத்து நிலையில் மாங்குளம் பொலிஸாரின் உதவியுடன் தவசீலன் குறித்த இடத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

காட்டுக்குள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவது மாத்திரமின்றி அங்கு வருகைதந்து யார் வீடியோ எடுக்க சென்னது என்றும் வீடியோ எடுக்க விடாது தடுத்து சட்டவிரோத மணலுடன் நின்ற உழவு இயந்திரத்தை அந்த இடத்தில் இருந்து எடுத்து சென்றதோடு ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கவனத்திற்கு கொண்டுசென்ற போது , இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

எனினும் இது சாதாரண விடயமாக கருத்தில் கொள்ளப்படாமல் ஊடகவியலாளர் தவசீலனின் வாழ்வு சம்பந்தமான பிரச்சினையாக கருதப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சட்டவிரோத செயற்பாடுகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்த முடியாத நிலைமை இருக்குமாயின் அது ஆபத்தானது என சுட்டிக்காட்டிய ஒன்றியம், தேசிய மக்கள் சக்தி அரசு , ஜனநாயக விழுமியங்களை பேணும் ஆட்சி என்ற வகையில் , இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *