இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான மீனவர்களின் பிரச்சினை நீண்ட காலமாக தீர்வு எட்டப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை கண்டித்து, திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் இராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டமொன்றும் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள், ஒரு படகுடன் தலைமன்னார் கடற்பரப்பில் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் தமிழ்நாடு, ராமேஸ்வரம், காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர் .
கைது செய்யப்பட்ட குறித்த 4 இந்திய மீனவர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
Link : https://namathulk.com