நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நீதிமன்றத்திற்குள் நடாத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.
பாதாள உலகக் குழு ஒன்றின் தலைவர் என கூறப்படும் கனேமுல்ல சஞ்சீவ துபாயிலிருந்து அண்மையில் நாடு கடத்தப்பட்ட நிலையில் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 19 ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றவாளி கூண்டில் கனேமுல்ல சஞ்சீவ ஏறியப்போது அங்கு சென்ற ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடாத்திவிட்டு தப்பிச்சென்றார்.
இதன்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கனேமுல்ல சஞ்சீவ உயிரிழந்தார்.
திரைப்பட பாணியில் விரைந்து செயற்பட்ட இலங்கை பொலிசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் , அன்றைய தினமே துப்பாக்கிதாரியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட சந்தேகநபரின் நிழற்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது.
அன்று முதல் இந்த நொடி வரை குறித்த துப்பாக்கிதாரி, அவருடன் பழகியவர்கள் மற்றும் துப்பாக்கிதாரியின் செயற்பாடுகள் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி வருகின்றன.
அந்தவகையில் துப்பாக்கிதாரிக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் இதுவரை பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று மாலை அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சட்டத்தரணியை போல நீதிமன்றத்திற்குள் சென்று துப்பாகிதாரிக்கு உதவிய பெண் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை
இவ்வாறான பின்புலத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினர் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com
