யாழ். வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவரே உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் கடந்த 19 ஆம் திகதி மாலை நால்வர் மீது வவுனியாவில் இருந்து வந்தவர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டது.
குடும்பத்தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும், சகோதரனின் மனைவி மீதும் வவுனியாவிலிருந்து வாகனம் ஒன்றில் ஆட்களை அழைத்து வந்து வீட்டுக்குள் புகுந்து கம்பி, கற்களால் தாக்குதல் நடாத்தியிருந்தார்.
இதன்போது காயமடைந்த நால்வரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
அங்கிருந்து ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இதேவேளை, தாக்குதல் நடத்திய வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் உள்ளிட்ட மூவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Link : https://namathulk.com