இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு

Aarani Editor
2 Min Read
மீனவர் விவகாரம்

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழில், நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர் எனவும், மீனவர் விவகாரத்தை மனிதாபிமானத்துடனேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அணுகுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே, கொழும்பு, மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சுக்கு இன்று சென்ற போதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அமைச்சருக்கும், பிரதி உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், கலாசார மற்றும் பொருளாதார உறவுகள் பற்றி பேசப்பட்டாலும் மீனவர் பிரச்சினை குறித்த விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது இந்திய மீனவர்களின் இழுவை படகு உட்பட சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் வடக்கு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் இலங்கையின் கடல்வளத்துக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி அமைச்சர் எடுத்துரைத்தார்.

இலங்கை கடற்பரப்புக்குள் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான ரீதியிலேயே அணுக வேண்டும் என இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.

அதேபோல பெரும்பாலான மீனவர்கள் கடற்படையினர் எச்சரிக்கை விடுத்தால் திரும்பி செல்கின்றனர் எனவும், ஒரு சிலரே அத்துமீறுகின்றனர் எனவும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

குறிப்பாக தமிழகத்திலுள்ள பணபலம் படைத்த முதலாளிமார், அரசியல்வாதிகள் மீனவர்களை பகடைக்காயாக பயன்படுத்த முற்படுகின்றனர் எனவும், தமது வாழ்வாதாரம் பற்றி மட்டுமே அவர்கள் சிந்திக்கின்றனர் எனவும், வடக்கு மீனவர்களின் நிலை பற்றி சிந்திப்பதில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அபிவிருத்திக்காக இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், அவை தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *