யாழ்ப்பாணம் செம்மணி பகுதியிலுள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை

Aarani Editor
1 Min Read
செம்மணி

யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பான வழக்கு, நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சட்ட வைத்திய அதிகாரி தமது அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பித்தார்.

குறித்த பகுதியில் 40க்கும் மேற்பட்ட எலும்பு மாதிரிகள் பெறப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு மாதிரிகளை விட ஏனைய அனைத்தும் மனித எச்சங்களின் மாதிரிகளாக உள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் விஞ்ஞானரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.

இது குறித்து முதற்கட்ட ஆய்வு செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

அத்துடன் 2 அடி ஆழத்துக்கு கீழேதான் இந்த மனித எச்சங்கள் எடுக்கப்படுள்ளதாகவும், இது தொடர்ச்சியாக மனித எச்சங்களால் நிறைந்த பகுதியாக உள்ளதா அல்லது தனிப்பட்ட புதைகுழியாக உள்ளதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும் என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

அந்தவகையில் மூத்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் ராஜ் சோமதேவா அவர்கள் இது குறித்து தனது ஆய்வினை செய்வதற்கு விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும், ராஜ் சோமதேவா கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான ஆய்வினையும் மேற்கொள்வதாக கூறினார்.

இவற்றை கருத்தில் கொண்ட நீதவான், முதற்கட்டமாக ஸ்கான் மூலம் ஆய்வினை செய்வதாகவும், அந்தவகையில் 4.02.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இது தொடர்பான கலந்துரையாடல் மன்றில் இடம்பெறும் எனவும், வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *