அம்பாறை, கல்முனை மாநகர சபையினரால் கொட்டப்படும் குப்பைகளினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டமானது கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் அருகில் நேற்று நடைபெற்றது.
இதன்போது, இப்போராட்டத்தில் கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் வசிக்கின்ற ஆண் பெண்கள் உட்பட சிறுவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றதுடன், பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய சுலோகங்களை ஏந்தி நீதி கோரி கோஷங்களை எழுப்பினர்.
பொலிசாரின் ஆலோசனைக்கமைய குறித்த போராட்டம் நிறைவு செய்யப்பட்டு, உரிய அதிகாரிகளிடம் பேசி தீர்வொன்றை பெற கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர இப்பகுதியில் மாநகர சபையினராலும் தனியார் சிலராலும் கொட்டப்படும் குப்பைகளினால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் குப்பைகள் எரிக்கப்படுவதனால் பாடசாலை மாணவர்கள் முதல் வயது வந்தோர் வரையிலும் சுவாச பிரச்சினைக்கு உள்ளாவதுடன் யானைகளின் அச்சுறுத்தலும் தொடர்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.






Link: https://namathulk.com