கொட்டாஞ்சேனை துப்பாக்கிப்பிரயோகத்தின் எதிரொலி : ஓ.ஐ.சி க்கு கொலை மிரட்டல்
கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘மோதர நிபுண’ என தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவர் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய கபொறுப்பதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கொட்டாஞ்சேனை மற்றும் கல்பொத்த சந்தியில் உள்ள தொலைபேசி கடையொன்றின் உரிமையாளர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கடந்த மாதம் 21ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
விரைந்து செயற்பட்ட பொலிசார் துப்பாகிதாரிகளை கைது செய்திருந்தனர்.
இதனையடுத்து மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை காட்டுமாறு அவர்களை முகத்துவாரம் காக்கைத்தீவு பகுதிக்கு பொலிஸார் அழைத்துச் சென்றனர்.
இதன்போது அவர்கள் பொலிஸாரை தாக்க முற்பட்டதால் பொலிஸார் நடத்திய பதில் துப்பாக்கிசூட்டில் சந்தேகநபர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மோதர நிபுண என்று கூறி அழைப்பை மேற்கொண்டவர் ‘கம்பஹாவில் விளையாடியது போல இங்கு விளையாட முடியாது’ என அச்சுறுத்தியுள்ளார்.
இந்த கொலை மிரட்டல் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் புதுக்கடை மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜாவிடம் அறிக்கை சமர்பித்தனர்.
அதற்கமைய , சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறு மேலதிக நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.