யாழில் மனிதப் புதைகுழியா ? :தோண்டுவதற்கான செலவு குறித்து நீதிமன்றம் கடும் உத்தரவு

Aarani Editor
1 Min Read
மனிதப் புதைகுழி

யாழ்ப்பாணம், செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியை அகழ்வதற்கான நிதி மதிப்பீட்டு அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் தகன மேடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட அத்திவார கிடங்கில் மனித எச்சங்கள் காணப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய யாழ் போதன வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

இதன்படி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகள் மனித எச்சங்கள் எனவும், சிறுவர்களின் பாற்பற்கள் இருப்பதும் சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று நீதிமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது, குறித்த மயானத்தில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் முடியும் வரை பொலிசாரின் பாதுகாப்பில் இருப்பதோடு, மயான நிர்வாக சபையின் அங்கத்தவர்களும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவது நம்பிக்கையை ஏற்படுத்தும் என சட்டத்தரணி சுகாஷ் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அத்தோடு, அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி தொடர்பான அறிக்கையை, காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் இணைந்து சமர்ப்பிக்குமாறும் அதனை மேல் நீதிமன்றம் ஊடாக நீதி அமைச்சுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *