காலாவதியான கடவுச் சீட்டுக்களை புதுப்பிப்பதற்காக 26,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் , வெளிநாடுகளில் இருந்து விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
இந்த விண்ணப்பங்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களால் பெறப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாவதாக தெரியவந்துள்ளது.
சில தனிநபர்கள் தங்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் காலாவதியாகிவிட்டதால், ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக பிரதி அமைச்சர் கூறினார்.
இதனால் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை வழங்குவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.
இருப்பினும், இந்த மாத இறுதிக்குள் இந்தப் பிரச்சினையை முடிந்தவரை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறிய பிரதி அமைச்சர், தற்போதைய அரசாங்கம் இந்த நெருக்கடியை உருவாக்கவில்லை என்பதையும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை தயாரிக்கும் போதும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களைப் பெறும்போதும் இடைத்தரகர்களின் உதவியை நாட வேண்டாம் எனவும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Link: https://namathulk.com