பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தற்போது விளம்பரப்படுத்தப்படும் மோசடியான கிரிப்டோ பண வர்த்தகம் தொடர்பான மோசடியான விளம்பரங்களை பிரதமர் செயலகம் வன்மையாகக் கண்டித்துள்ளது .
இந்த மோசடி விளம்பரங்களை சமூக ஊடகங்கள் ஊடாக ஊக்குவித்து, இலங்கை மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் வெளிநாட்டு நிறுவனங்கள் செயற்பட்டுவருவதுடன், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கையின் பிரபலமானவர்களின் பெயர்களை பயன்படுத்தி இந்த மோசடியான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
இந்த விளம்பரங்களின் முக்கிய நோக்கம் இந்த நாட்டில் உள்ள பிரபலமானவர்கள் குறித்த மக்களின் நல்லெண்ணத்தை மலினப்படுத்துவதன் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதும், பிரபலமானவர்கள் மீதான நம்பிக்கையை சிதைப்பது என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
லிதுவேனியாவில் இருந்து செயற்படும் இந்த மோசடி கணக்குகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்த மோசடியான விளம்பரங்கள் இலங்கையில் உள்ள முகநூல் பாவனையாளர்களை குறிவைத்து தீவிரமாக செயற்படுவதாக பிரதமர் செயலகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலவலகம் தெரிவித்தது.
அண்மையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பிரபல ஊடகவியலாளர்களான அமந்தா பெரேரா மற்றும் சுனந்த தேசப்பிரிய மற்றும் முன்னைய சில சந்தர்ப்பங்களில் இலங்கையின் ஏனைய பிரபலங்களும் இந்த விளம்பரங்கள் மூலம் இலக்குவைக்கப்பட்டிருந்ததாக பிரதமர் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரபலங்களால் அங்கீகரிக்கப்பட்டதாக பொய்யாகக் கூறும் கிரிப்டோ பண முதலீடுகளை ஊக்குவிக்கும் இணைய விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறுட பிரதமர் செயலகம் வலியுறுத்தியுள்ளது.
எந்தவொரு அரசாங்க அதிகாரியோ அல்லது அமைச்சோ எந்தவிதமான கிரிப்டோ பண முதலீட்டு திட்டத்தையும் அங்கீகரிக்கவில்லை என பிரதமர் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஏமாற்று வணிகங்கள் பரவுவதைத் தடுக்கவும், நிதி மோசடிகளில் இருந்து இலங்கைப் பயனர்களைப் பாதுகாக்கவும் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆநுவுயு நிறுவனத்திடம் பிரதமர் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரபலமானவர்களின் அங்கீகாரம் உள்ளதாகக் கூறப்படும் சந்தேகத்திற்கிடமான விளம்பரங்களில் ஈடுபடவோ அல்லது அவற்றை கிளிக் செய்யவோ வேண்டாம் என்றும், மேலும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இல் மோசடியான விளம்பரங்களை அந்தந்த நிறுவனங்களுக்கு நேரடியாக முறைப்பாடு செய்யுமாறும், முதலீடு செய்வதற்கு முன் அனைத்து நிதி வாய்ப்புகளையும் முறையான மூலங்களின் ஊடாக சரிபார்க்குமாறும் பிரதமர் அலுவலகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
பிரதமர் அலுவலகம் என்ற வகையில், இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதுடன், மேலும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை அறிய பிரதமர் செயலகத்தின் இற்றைப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகத்தை நாடுமாறு பிரதமர் செயலகம் கூறியுள்ளது.
Link : https://namathulk.com