சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் இரண்டு பெண் விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பயணி ஒருவர் விமான நிலைய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிசார் கூறினர்.
அதிக மதுபோதையில் இருந்த சந்தேக நபர், பணியில் இருந்த இரண்டு பெண் விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளதாக பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விமான பணிப்பெண்கள் இந்த சம்பவத்தை விமானிக்கு தெரிவித்ததை தொடர்ந்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், சந்தேக நபர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக இரண்டு விமான பணிப்பெண்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், சந்தேக நபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com