முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை பயன்படுத்தி லண்டனுக்கு விஜயம் செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், அவரது பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவும் 2023 ஆம் ஆண்டு அரசாங்க நிதியின் செலவில் லண்டனுக்கு விஜயம் செய்ததாகக் கூறுவது முற்றிலும் தவறானது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க மூன்று முறை லண்டனுக்கு விஜயம் செய்துள்ளார்.
2023 மே ஒன்பதாம் திகதி மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க லண்டன் சென்றிருந்தார்.
இரண்டாவது முறையாக பாரிஸ் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் (IDU) 40 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குப் பயணம் செய்தார்.
ஹவானாவில் நடந்த ஜி 77 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க, நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திலும் கலந்து கொண்டதுடன் பின்னர் தனது மூன்றாவது பயணமாக லண்டனுக்கு விஜயம் செய்தார்.
கிரேட் பிரிட்டனின் வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்த்தில் மைத்ரி விக்ரமசிங்கவுக்கு பேராசிரியர் பட்டம் வழங்கும் விழா இந்த நாட்களில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு ரணில் விக்கிரமசிங்கவும் அழைக்கப்பட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி நிவ்யார்க்கிற்கு விஜயம் செய்தபோது அந்த நிகழ்விலும் கலந்து கொண்டார்.
இந்தப் பயணங்களின் போது, ரணில் விக்கிரமசிங்க பல நாட்டுத் தலைவர்களையும் சந்தித்தார்.
மேலும், முதல் பெண்மணியாக, பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க சர்வதேச மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் மற்றும் அமர்வுகளில் பங்கேற்றார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதிகாரிகளும் லண்டன் பயணத்திற்காக பெரும் தொகை செலவிடப்பட்டதாகக் கூறுவது மிகவும் சிக்கலானது என அவரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயமானது தற்போதைய அரசாங்கத்திற்கு இராஜதந்திர பயணம் குறித்த புரிதல் இல்லை என்பதை தெளிவுபடுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க, 2023ஆம் ஆண்டில் அரசாங்க செலவில் லண்டனுக்கு எந்த தனிப்பட்ட பயணத்தையும் மேற்கொள்ளவில்லை என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com