விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி வரை தேசபந்து தென்னகோனை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நேற்று மாலை உத்தரவிட்டார்.
அதன்பின்னர் சிறைசாலை அதிகாரிகளால் தேசபந்து தென்னகோன் தும்பர சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தேசபந்து தென்னகோனை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் போதும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளபோதும் உரிய பாதுகாப்புகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
இதேவேளை மாத்தறை வெலிகம பகுதியில் ஹோட்டல் ஒன்றில் நடாத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்துடன் தொடர்புடைய 06 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து, குறித்த சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளனர்.
விசாரணைகளுக்கு பின்னர் இவர்கள் ஆறு பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி சந்தேகநபர்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனு பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய , ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவு பெறும் வரையில் சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்ய சட்டமா அதிபரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு ஏற்கனவே அறிவித்துள்ளது.
மாத்தறை வெலிகம பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஹோட்டல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பாட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் ஒருவரான முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Link: https://namathulk.com/