2024 ஆம் ஆண்டு லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் கண்டி சாம்ப் ஆர்மி அணியின் மேலாளராக இருந்த ஆகாஸ் பச்லோடியாவுக்கு மாத்தளை உயர் நீதிமன்றத்தால் 04 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக 85 மில்லியன் ரூபா அபராதமாகவும், உபுல் தரங்காவுக்கு 2 மில்லியன் ரூபா இழப்பீடாகவும் செலுத்த உத்தரவிடப்பட்டது.
2024 ஆம் ஆண்டு லெஜெண்ட்ஸ் லீக் தொடர் பல்லேகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 8 முதல் மார்ச் 19 வரை நடைபெற்றது.
இதில் இந்திய பிரஜையான ஆகாஸ் பச்லோடியா, கண்டி சாம்ப் ஆர்மி அணியின் மேலாளராக பணியாற்றினார்.
இவர், இலங்கையின் தலைமை கிரிக்கெட் தேர்வாளரான உபுல் தரங்கவை அணுகி, போட்டி நிர்ணயத்திற்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக உபுல் தரங்க மற்றும் பஞ்சாப் ரோயல்ஸ் அணியில் விளையாடிய முன்னாள் நியூசிலாந்து வீரர் நீல் ப்ரூம் ஆகியோர் இலங்கை விளையாட்டு அமைச்சின் சிறப்பு விசாரணைப் பிரிவிடம் முறைப்பாடு அளித்தனர்.
விசாரணையில், படேல் வீரர்களை அணுகி, பணம் கொடுத்து போட்டியின் முடிவை மாற்ற முயன்றதாக தெரியவந்தது.
நீல் ப்ரூமிடம் 10 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டு 10 ஓட்டங்களுக்கு குறைவாக எடுக்குமாறு அறிவுறுத்தியதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, படேல் மீது மாத்தளை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல், படேல் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
அவர் கடல் வழியாக நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, அது தொடர்பாக ஊஐனு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகாஸ் பச்லோடியா நேரில் ஆஜராகாத நிலையில், மாத்தளை உயர் நீதிமன்றம் அவருக்கு 04 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும், 85 மில்லியன் ரூபாய் அபராதமும், உபுல் தரங்கவுக்கு அவதூறு காரணமாக 2 மில்லியன் ரூபாய் இழப்பீடும் செலுத்த உத்தரவிடப்பட்டது.
ஆகாஸ் பச்லோடியா மீதான பயணத் தடை முன்னர் விதிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நாட்டை விட்டு தப்பியது எவ்வாறு என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Link : https://namathulk.com