முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்யுமாறு கோரிக்கை – கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர்.

Aarani Editor
1 Min Read
முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரனின் அழைப்புக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனும் கலந்துகொண்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவுசெய்யுமாறு அதிகாரிகளிடம் பிரதி அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டு தீர்க்கப்பட்ட பிரச்சினைகள், தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகின்ற பிரச்சினைகள் இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

வீதிகள் தொடர்பான விடயங்களும், கனிய மணல் அகழ்வு தொடர்பான விவகாரங்களும், போக்குவரத்துத் தொடர்பான பிரச்சினைகளும் கூடுதலாக இதன்போது ஆராயப்பட்டன.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான கடைகளின் வைப்புப் பணத்தொகை அதிகமாகவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டபோது, அதற்குப் பதிலளித்த ஆளுநர், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே பிரதேச சபைகள் உள்ளன என்றும், அதிகளவு தொகையை அறவிடுவது பொருத்தமற்றது எனவும் ஆயுநர் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள், நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் திட்டங்கள், அனுமதி பெறவேண்டிய திட்டங்கள் என்பன சமர்ப்பிக்கப்பட்டன.

அனைத்துக்கும் உரிய அனுமதிகள் ஒருங்கிணைப்புக் குழுவால் வழங்கப்பட்டது.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

சட்டவிரோதமாக கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவலாக முன்னெடுக்கப்படுவதாகவும் 239பேரை இதுவரை அடையாளம் கண்டுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *