இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், உட்கட்டமைப்பு மேம்பாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மோடி, அநுராதபுரத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அவர் பிராந்திய இணைப்பு தொடர்பான முக்கிய செய்தியை வெளிப்படுத்தும் வகையில் தமது விஜயத்தை நிறைவு செய்து இராமேஸ்வரத்துக்குப் பயணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
6ஆம் திகதி தமது விஜயத்தை நிறைவு செய்து இராமேஸ்வரத்துக்குச் செல்லவுள்ள அவர், புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிராந்திய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் இராமேஸ்வர விஜயம் அமையுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டமை மற்றும் கொவிட்-19 காலப்பகுதியில் நிறுத்தப்பட்ட சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமானச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை என்பன பிராந்திய ஒருமைப்பாட்டின் வெளிப்பாடாகும் என இந்தியா தெரிவிக்கிறது.
Link : https://namathulk.com