எதிர்வரும் தமிழ் , சிங்கள புத்தாண்டின் போது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு 50 வீத விலைக்கழிவுடன் உணவுப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக தள்ளுபடி விலையில் உணவுப் பொதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவி அறிவித்துள்ளது.
அதன்படி, 5000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றை 50% தள்ளுபடியில் , 2,500 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
லங்கா சதொச மூலம் உள்ளடக்கப்படாத பகுதிகளில் தகுதியான பயனாளிகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட கூட்டுறவு விற்பனை நிலையங்கள் (COOPFED) ஊடாக இந்தத் விலைக்கழிவு பொதி வழங்கப்படும்.
அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள எட்டு இலட்சத்து பன்னிரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பத்து மூன்று (812,753) குடும்பங்கள் பயனாளி குழுவாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் இந்தத் திட்டம் ஏப்ரல் 13 ஆம் திகதி வரை மாத்திரமே நடைமுறையில் இருக்கும்.
தகுதியானவர்களுக்கு முறையாக இந்த திட்டம் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வதற்கான பொறிமுறையொன்றும் நடைமுறையில் உள்ளது.
நிதி அமைச்சு, உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு மற்றும் கூட்டுறவு விற்பனை நிலைய வலையமைப்பு ஆகியவை இணைந்து “சத்துடின் சதொசின்” என்ற கருப்பொருளில் விசேட திட்டமாக இது செயல்படுத்தப்படும்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டாடப்படும் முதலாவது தமிழ், சிங்கள புத்தாண்டின் போது, மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பற்றாக்குறையின்றி மற்றும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்ய இந்தத் திட்டம் உதவும்.
Link: https://namathulk.com