முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் அக்கரைவெளி மரியாமுனை வீதி புனரமைப்புத் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் நேற்று காலை 8.30 மணிக்கு நேரடிக் களவிஜயம் இடம்பெற்றது.
கடந்த வாரம் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மேற்க்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனின் ஏற்பாட்டி இந்த களவிஜயம் இடம்பெற்றது.
குறித்த கள விஜயத்தின் போது பிரதானமாக அக்கரைவெளி மரியா முனைக்கு செல்லும் 16 Km வீதி முற்றுமுழுதாக பழுதடைந்தும் சில இடங்களில் வீதியற்ற நிலையிலும் காணப்படுகின்றது.
இங்கு உலத்துவெளி, எரிந்தகாடு, நாயடச்சமுறிப்பு, பெரியவெளி, அக்கரைவெளி, மரியாமுனை ஆகிய இடங்களில் 1,800 ஏக்கர் வயல்நிலம் பயிர்செய்யப்பட்டு வருகின்றது.
இதில் குறிப்பாக 600 விவசாயிகள் தங்கள் அறுவடை நெல்லை பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்ப்பதற்கு மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இப்பாதையை புரைமைத்துத் தருமாறு பிரதேச விவசாயிகள் மாவட்ட செயலாளரிற்கும் வடமாகாண ஆளுநரிற்கும் கோரிக்கையை முன்வைத்தனர்.
மாவட்டச் செயலகத்தினால் இவர்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு பல்வேறு திட்டங்களூடாக இவ்வீதியை புனரமைக்க முன்மொழியப்பட்டது.
இதன் பிரகாரம் வடமாகாண ஆளுநர், மாவட்ட செயலாளர் துறைசார்ந்த அதிகாரிகள், குறித்த பகுதி விவசாயிகள் முதலானோருடன் வீதி புனரமைப்பு அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கடந்த வாரம் கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது 2025 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டத்திலும் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்திலும் குறித்த வீதியானது முக்கியத்துவத்தின் அடிப்படையில் கட்டம் கட்டமாக புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநரால் உறுதியளிக்கப்பட்டது.
Link: https://namathulk.com