நாட்டின் தரமான சுகாதார சேவையின் காரணமாக நோய்கள் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Aarani Editor
1 Min Read
நளிந்த ஜயதிஸ்ஸ

சுகாதாரப் பணியாளர்களின் திறமையான மற்றும் தரமான சேவையின் காரணமாக, போலியோ, தட்டம்மை, ரூபெல்லா மற்றும் பிறந்த குழந்தை மஞ்சள் காமாலை போன்ற நோய்களை ஒழிக்க முடிந்ததாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய நோய் எதிர்ப்பு சக்தி மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

இதன்போது, ஹெபடைடிஸ் பி உட்பட பல தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோய்களை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துவதன் மூலம் சுகாதார சேவை நாட்டின் சிறந்து விளங்குவது நிருபிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, தொற்றுநோயியல் பிரிவு மற்றும் உலக சுகாதார அமைப்பு, GAVI தடுப்பூசி கூட்டணி, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாடு பத்து வருடங்களுக்குப் பிறகு நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொற்று மற்றும் தொற்றாத நோய்களைத் தடுப்பதற்கும், சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வலுவான அடித்தளமாக ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துவதில் தற்போதைய அரசாங்கம் அதிக கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், நாட்டு மக்களுக்கு உலகளாவிய சுகாதார சேவையை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் தடுப்பூசி செயல்முறையை தொடர்ந்து பராமரிக்க GAVI கூட்டணி வழங்கிய பங்களிப்பை அமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

அத்துடன், அடுத்த ஆண்டுகளில் தடுப்பூசி அணுகலை மேம்படுத்துதல், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துதல் மற்றும் பொது சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக புதிய தடுப்பூசிகளை அறிமுகப்படுத்துவது குறித்து GAVI உடன் தொடர்ந்து கூட்டாண்மை மூலம் ஆராய எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *