சிறிமாவே பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தலைமையில் பாடசாலையின் பிரதான கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
ஜனநாயகத்தின் மதிப்புக்களைப் பாடசாலை மாணவர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதற்கும், பாராளுமன்ற அமைப்புப் பற்றிய நடைமுறை அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்குவதை நோக்காகக் கொண்டு சிறிமாவோ கல்லூரியும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
சமூகத்தை ஒரு முற்போக்கான நிலைக்குக் கொண்டுவருவதில் பெண்களுக்குப் பெரும் பங்கு இருப்பதாக குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தெரிவித்தார்.
அத்துடன், மாணவர் பாராளுமன்றம் போன்ற நிகழ்ச்சிகளின் ஊடாகப் பாடசாலை மட்டத்திலிருந்தே இதற்குத் தேவையான உந்துதலை வழங்க முடியும் எனவும் பிரதித் தவிசாளர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அரசியல் போன்ற துறைகளில் பெண்களின் தலைமைத்துவத்தை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும், தற்போதைய பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முன்னைய பாராளுமன்றங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது எனவும் பிரதித் தவிசாளர் தெரிவித்தார்.
இருந்தபோதும் ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த மட்டத்திலேயே பெண்களின் பிரதிநிதித்துவம் அமைந்திருப்பதாக பிரதித் தவிசாளர் கூறினார்.
எனவே, சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்திலிருந்து எதிர்கால பெண் தலைவர்கள் உருவாகுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தமக்கு இருப்பதாகவும் ஹேமாலி வீரசேகர மேலும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.
இதன் பின்னர் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சர்களும் தமது அமைச்சினால் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள திட்டங்களை முன்வைத்து அவை பற்றி விளக்கமளித்தனர்.
மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவியருக்கு சின்னங்களும் அணிவிக்கப்பட்டன.
இலங்கைப் பாராளுமன்றத்தின் அதிகாரிகள், சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
Link: https://namathulk.com/