இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவு.

Aarani Editor
2 Min Read
Upali Pannilage

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட்டும் இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இதில் இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவுசெய்யப்பட்டார்.

1956ஆம் ஆண்டு முதல் சுவிட்சலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை பிரதிச் சபாநாயகர் இங்கு நினைவுகூர்ந்தார்.

விவசாயம், கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசனம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டுக்கும் இடையில் வலுவான அபிவிருத்தி ஒத்துழைப்புக்கள் காணப்படுவதாகவும், சுனாமி அனர்த்தத்தின் பின்னரான மீட்புப் பணிகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றியதாகவும் பிரதிச் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

கொவிட் -19 தொற்றுநோய் காலப்பகுதியில் சுவிட்சலாந்து இலங்கைக்கு வழங்கிய உதவிகளை இங்கு வலியுறுத்திய பிரதிச் சபாநாயகர், இரு நாட்டுக்கும் இடையில் காணப்படும் பொருளாதார உறவுகள் உள்ளிட்ட ஒத்துழைப்புக்கள் மேலும் விஸ்தரிக்கப்படும் என நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.

இரு நாட்டுப் பாராளுமன்றங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் மற்றும் நட்புறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இந்த நட்புறவுச் சங்கம் சிறந்ததொரு தளமாக அமையும் எனவும் பிரதிச் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதில் இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் முக்கியத்துவத்தை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் வலியுறுத்தினார்.

பொருளாதார அபிவிருத்தி, வர்த்தகம் மற்றும் பாராளுமன்ற பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதில் சுவிட்சர்லாந்து அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் இங்கு உரையாற்றிய சுவிட்சலாந்து தூதுவர் தெரிவித்தார்.

நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர் உபாலி பன்னிலகே, நல்லிணக்கம், சமாதானத்தைக் கட்டியெழுப்புவது உள்ளடங்கலான அபிவிருத்தி போன்றவற்றுக்கு சுவிட்சர்லாந்து தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *