அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் இலங்கை இரண்டு சுற்று மெய்நிகர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதற்கான திட்டங்களை வகுக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்ட குழு இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
இலங்கையின் நிலைப்பாட்டை கோடிட்டுக் காட்டும் இரண்டாவது கடிதமும் வாஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயந்த கூறியுள்ளார்.
கலந்துரையாடல்களின் போது, வர்த்தக இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை இலங்கை முன்வைத்துள்ளதுடன் , விடயம் தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் பொருளாதார மேப்பாட்டு பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் சென்று ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய இலங்கை தூதுக்குழுவை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் போது விதிக்கப்பட்ட 44% வரியை நிவர்த்தி செய்வதற்கும் இலங்கை தற்போது முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இறக்குமதி வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளின் கலவையாக விவரிக்கப்படும் இந்த வரி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது.
Link: https://namathulk.com/