முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, இலஞ்ச விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
மாகாண சபை நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை தொடர்பாக விக்ரமசிங்க வெளியிட்ட விசேட அறிக்கையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஆணைக்குழு விசாரணை நடாத்த உள்ளது.
பிரதமராக இருந்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலுடன், மாகாண சபை நிதியை நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பதைத் தடைசெய்து திறைசேரி செயலாளர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டதாக விக்ரமசிங்கே கூறியிருந்தார்.
நிதியாண்டுக்குள் நிதி செலவிடப்பட வேண்டும் அல்லது திறைசேரிக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அப்போது ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் மற்றும் ஏனைய மாகாணத் தலைவர்களுக்கு இந்த தீர்மானம் குறித்து அறிவிக்கப்பட்டதாகவும், இதனால் அத்தகைய வைப்புத்தொகைகள் திரும்பப் பெறப்பட்டதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆகவே , சமீபத்திய சட்ட நடவடிக்கைகள் அரசியல் நோக்கம் கொண்டவையா என்று ரணில் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் சாமர சம்பத் திசநாயக்கவிற்கு பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்படுகிறதா என்பது குறித்தும் விக்கிரமசிங்க கவலை தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த கருத்துக்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக இலஞ்ச விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
Link: https://namathulk.com/