அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர தீர்வை வரி அமுலாக்கத்தின் இடைநிறுத்தக் காலத்தை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை முன்வைக்கவுள்ளது.
இலங்கை மீதான பரஸ்பர தீர்வை வரியை 44 சதவீதமாக அதிகரித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, இலங்கையில் பெரும் பொருளாதார பாதக நிலை உணரப்பட்டிருந்தது.
இதனை அடுத்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதுடன், இதற்கான நிபுணர் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் தீர்வையும் ஒத்துழைப்பையும் கோரி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால், அமெரிக்க ஜனாதிபதிக்கு உடனடியாக கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.
எவ்வாறாயினும் இந்த வரி விதிப்பினால் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பின் காரணமாக, புதிய வரி அமுலாக்கத்தை 90 நாட்களுக்கு அமெரிக்கா ஒத்திவைத்தது.
இந்த காலத்தை ஆறு மாதங்களாக நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Link: https://namathulk.com