3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில் சடலம் ஒன்றினை சம்மாந்துறை பொலிசார் மீட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினையடி சந்தி பகுதியில் உள்ள சிகை அலங்கார கடையொன்றில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இன்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் என்பதுடன் உயிரிழந்தவர் வாடகை கடையில் சிகை அலங்கார கடை நடத்தி வந்தவர் என்பதுடன் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த நபர் வேலையின் நிமித்தம் சிகை அலங்கார கடை வேலைகளை முடித்து கடையறைக்குள் இரவு தூக்கத்தை கழிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் தெரியவந்துள்ளதுடன் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மற்றும் தடயவியல் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Link: https://namathulk.com/