இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னாரில் இருந்து தமிழ்நாடு, இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மன்னார் பஜார் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
ஆனால் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையினால், குறித்த திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி கூறினார்.
எனவே, எதிர் காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், குறித்த வேளைத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.
மேலும், எதிர்வரும் ஜூன் மாதம் முதல், மேலதிகமாக 4 லட்சம் நபர்களுக்கு அஸ்வெசும நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Link: https://namathulk.com/
