கொட்டாஞ்சேனை சிறுமி மரணம் : பொலிஸ் விசாரணையை விரைவுபடுத்தவும் – பிரதமர்

Aarani Editor
1 Min Read
கொட்டாஞ்சேனை

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் பொலிஸ் குழு மற்றும் சிறுமியின் பெற்றோருடனான சந்திப்பு மே மாதம் 10 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலை மற்றும் மேலதிக வகுப்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பாரபட்சமற்ற, முறையான மற்றும் மிக விரைவான விசாரணையை நடத்துமாறு பிரதமர் பொலிஸ் விசாரணைக் குழுவிற்கு அறிவுறுத்தினார்.

இந்த சம்பவம் பதிவாகியது முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முறையாக இடம்பெற்றனவா என்பது குறித்து கல்வி அமைச்சின் மூலம் உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் இவர்களிடம் தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்கள் குறித்து தலையிட வேண்டிய அரச நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது என்றும், துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிள்ளைக்கு நேர்மறையான பதில் வழங்கப்படுவதில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளமையினால், இந்த பொறிமுறையை கண்காணித்து, அதை நெறிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க, சிறுவர் நல மருத்துவ நிபுணர் வைத்தியர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு பிரதமரினால் நியமிக்கப்பட்டது.

சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *