நுவரெலியாவில் நடைபெறும் அரச வெசாக் கொண்டாட்டத்திற்கு செல்லும் மக்கள் பொலிதீன் உள்ளிட்ட மக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு க்ளீன் சிறிலங்கா திட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டு மக்கள் நமது பொறுப்பை நிறைவேற்ற, கூட்டாக தலையிட்டு, பொருத்தமான இடங்களில் குப்பைகளை அகற்றவும், சுற்றுப்புற சூழலின் தூய்மையை பாதுகாக்கவும் உயர்ந்தபட்ச கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஆரம்பமாகி உள்ள அரச வெசாக் விழாவுடன் இணைந்து, விழாவில் பங்கேற்கும் மக்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் கழிவுகளை நிர்வகிப்பதற்கும் க்ளீன் சிறிலங்கா விசேட திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் வெசாக் வாரத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் நுவரெலியாவுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கிரேகரி ஏரி மற்றும் அரசு வெசாக் விழா நடைபெறும் நுவரெலியா சர்வதேச பௌத்த மையம் ஆகியவற்றை மையமாக கொண்டு இந்த துப்பரவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com/
