இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கையர் ஒருவரின் மனுவை நிராகரித்த இந்திய உயர்நீதிமன்றம், உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகள் தங்குவதற்கான சத்திரம் இந்தியா அல்ல என, வாய்மொழியாகக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் 2015ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு எதிராக, 2018ஆம் ஆண்டில் சென்னை மேல் நீதிமன்றம் 7 வருடச் சிறைத்தண்டனையை விதித்தது.
குறித்த, தண்டனைக் காலம் நிறைவடைந்ததும், உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததுடன், அதனைச் சவாலுக்கு உட்படுத்திக் குறித்த இலங்கையர் இந்திய உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, குறித்த நபர் சட்டபூர்வமாக இந்தியா வந்தவர் என்றும், அவரது சொந்த நாட்டில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.
அதன்போது, உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா என்றும், ஏற்கனவே 140 கோடி பேருடன் போராடி வருகின்ற இந்தியா, வெளிநாட்டினரை மகிழ்விக்கக்கூடிய ஒரு சத்திரம் அல்ல எனவும், இந்திய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் தலைமை நீதியரசர் தீபங்கர் தத்தா குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, தமது சேவை பெறுநரின் உயிருக்கு இலங்கையில் அச்சுறுத்தல் இருப்பதாக மனுதாரரின் சட்டத்தரணி தொடர்ந்து வலியுறுத்திய போதிலும், நீதிமன்றம் அவரை வேறு நாட்டிற்குச் செல்லுமாறு கோரியதுடன், அவரது மனுவையும் நிராகரித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
link: https://namathulk.com/
