பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக அனைத்து வழிகளிலும் போராடியவர்கள் நாங்கள்.எனவே, இந்தச் சட்டத்தை நிச்சயம் நீக்குவோம், ஐரோப்பிய ஒன்றியக் குழுவிடமும் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நேர்காணலொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே, ஜனாதிபதி இதனை கூறினார்.
எமது நீண்டகால எதிர்பார்புகளும், ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கும் கருத்துக்களும் சமாந்தரம் உடையவையாக உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த விடயத்தை மிகவும் வெளிப்படையாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
1979 ஆம் ஆண்டில், பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவந்தபோது அதற்கு எதிராகக் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு, சிறைக்குச் சென்றவர்கள் தமது உறுப்பினர்கள் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதேபோல், 1988ஆம் மற்றும் 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் போராட்டங்களை நடத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எனவே, பயங்கரவாத தடைச்சட்டம் எந்த நிபந்தனையும் இல்லாமல் நிச்சயமாக நீக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.
இந்த விடயத்தில் ஓர் அரசாங்கம் என்ற வகையில் உறுதியாக உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஆனால், சட்டமொன்றை இரத்துச் செய்யும் போது, சட்டத்தில் வெற்றிடம் இருக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அவ்வாறான வெற்றிடத்துக்கு இடமளிக்காமல், சட்டத்தை ஈடுச்செய்யக் கூடிய வகையில் புதிய சட்டம் அவசியம் எனவும் ஜனாதிபதி கூறினார்.
எனவே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவும், புதிய சட்டத்தை கொண்டுவரவும் குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
Link: https://namathulk.com/
