யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக வந்திருந்த இளம் யுவதி ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி கடத்தப்பட்ட வேளையில், நபர் ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளியை அடிப்படையாக வைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் யுவதி வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளதாகவும், அண்மையில் அவர்களின் இருப்பிடம் அறிந்த பெற்றோருக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததன் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் திருமண வயது வந்துவிட்டதால் அவர்களை பிரிக்க முடியாது எனவும் சேர்ந்து வாழலாம் எனவும் தீர்ப்பளித்தது.
இவ்வாறான பின்னணியில் வழக்கு நிறைவடைந்து வீடு திரும்போது யுவதியின் சகோதரர்கள் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழுவினர் அந்த இளைஞனை தாக்கிவிட்டு, யுவதியை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர்.
குறித்த யுவதி கடத்தப்பட்ட போது காயமடைந்த வாலிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Link: https://namathulk.com/
