ரணிலின் சாதனையை முறியடிக்குமாறு அநுரவுக்கு சவால் விடுக்கும் முன்னாள் அமைச்சர்

Aarani Editor
1 Min Read

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை கைது செய்து, ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை முறியடியுங்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சவால் விடுத்துள்ளார்.

துறைமுக கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கும், மனித படுகொலைகளுக்கும் நேரடி தொடர்புண்டு என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

பரிசோதனைகள் ஏதுமின்றி ஜனவரி, 18 ஆம் திகதி சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகவும், அந்த கொள்கலன்களில் இருந்த பொருட்கள் என்னவென்பதை உரிய தரப்பினர் வெளிப்படுத்தவில்லை எனவும் சுங்க திணைக்கள சேவை சங்கம் குறிப்பிட்டது.

இந்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு தான் உத்தரவு பிறப்பித்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

பிமல் ரத்நாயக்க கப்பல் துறை அமைச்சராக இருக்கலாம், ஆனால் சுங்கத்திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது.

இந்த கொள்கலன்களில் ஆயுதம் மற்றும் ஆயுத இணைப்பு கருவிகள் இருக்கலாம் என பாரியதொரு சந்தேகம் எமக்கு காணப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராக பதவி வகித்த கெஹெலிய ரம்புக்வெல மருந்து கொள்வனவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டமை அதுவே முதல்முறையாகும்.

இவ்விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க தலையிடவில்லை.

சுயாதீன விசாரணைகளுக்கு இடமளித்து சாதனை படைத்தார். இந்த சாதனையை முடிந்தால் முறியடிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சவால் விடுகிறேன் என்றார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *