கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க போவது யார் ?

Aarani Editor
2 Min Read
Colombo mc

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

அதில் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அதற்காக வாக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்படவுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் முழுமையான வெற்றியைப் பெறவில்லை.

தேசிய மக்கள் சக்தி சார்பில் 48 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 29 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 13 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 5 உறுப்பினர்களும் தெரிவாகினர்.

மேலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு எண் 03 சார்பில் 3 உறுப்பினர்களும், சர்வஜன அதிகாரம் சார்பில் 2 உறுப்பினர்களும், ஐக்கிய சமாதான கூட்டணி சார்பில் 2 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு எண் 04 மற்றும் 05 சார்பில் தலா 2 மற்றும் 04 உறுப்பினர்களும் தெரிவாகினர்.

இதுதவிர, ஐக்கிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தேசிய விடுதலை முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு, சுயேட்சைக் குழு எண் 01 மற்றும் சுயேட்சைக் குழு எண் 02 சார்பில் தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் கொழும்பு மாநாகர சபைக்கு தெரிவாகினர்.

எனினும், 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு ஒரு கட்சிக்கு 59 உறுப்பினர்கள் தேவைப்படும்.

இவ்வாறான பின்னணியில், எந்தவொரு அரசியல் கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாததால், கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை அமைப்பது தொடர்பாக அதன் முதல் கூட்டம் ஜூன் 16 அன்று நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்டு, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தரவால் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பைத் தொடர்ந்து, கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் நியமிக்கப்படுவர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *