முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் போராளி மூன்றாவது நாளாகவும் தனது போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.
முன்னாள் போராளிக்கு, பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்ற நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று தமது ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த போராளியின் கொள்கைகளுடன் தாம் உடன்படுவதாகவும், இவருடைய கோரிக்கைகள் அடங்கிய வகையிலே புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அத்துடன், உடனடியாக இதனை செயல்படுத்த முடியாத காரணத்தினால் உங்களது உயிரை இழக்க நாங்கள் விரும்பவில்லை ஆகவே எங்களது இந்த முயற்சிக்கு உரிய ஒரு கால அவகாசத்தை கொடுத்து தங்களுடைய போராட்டத்தை நிறைவு செய்யுமாறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் கோரி இருந்தனர்.
இருப்பினும் தமிழரசு கட்சியினுடைய உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், மூன்று கட்சிகளையும் சேர்ந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து வந்து குறித்த அரசியல் அமைப்பு விடயத்தில் தனது கோரிக்கைக்கு ஏற்ற வகையில், விடயங்களை கையாளுவதாக உத்தரவாதம் தரும் பட்சத்தில் தான் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுவதாக முன்னாள் போராளி அறிவித்துள்ளார்.
Link : https://namathulk.com