அம்பாறை, புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மீள்சுழற்சி நிலையத்தின் அருகில் குப்பை மேடாக காட்சியளித்த பகுதி ‘க்ளீன் சிறிலங்கா’ செயற்திட்டத்தின் மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.
அம்பாறை பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், அங்குள்ள புத்தங்கல வனப்பகுதியில் தொடர்ச்சியாக கொட்டப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் குப்பை மேடு உருவாகியிருந்தது.
குப்பை மேட்டுக்கு யானைகள் உணவு தேடி வரத் தொடங்கியதன் காரணமாக அப்பிரதேசத்தின் ஊடான போக்குவரத்து பாதுகாப்பற்றதாக மாறியது.
கடந்த 2024ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் அம்பாறையில் நடைபெற்ற பொசோன் வலயத்தைப் பார்வையிடச் சென்ற 65 வயதான முதியவர் ஒருவரும், பொலிஸ் உத்தியோகத்தரும் புத்தங்கல பகுதியில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான முதியவர் உயிரிழந்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் நீண்ட நாள் சிகிச்சையின் பின் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியிருந்தார்.
இது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்கள் அதற்கு முன்னரும் இடம்பெற்றிருந்தன.
அதேபோன்று, இரசாயனக் கலவைகள் கொண்ட குப்பைகளை உணவாக உட்கொண்டதன் காரணமாக கடந்த 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் புத்தங்கல குப்பை மேட்டில’ காட்டுயானையொன்று உயிரிழந்திருந்தது.
இந்நிலையில், குறித்த குப்பை மேடு ‘க்ளீன் சிறிலங்கா’ செயற்திட்டத்தின் ஊடாக சுத்தப்படுத்தப்பட்டு, அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளும் அகற்றப்பட்டுள்ளன.
Link: https://namathulk.com