நாட்டை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
திரைக்கதை பாணியில் நடாத்தப்பட்ட இந்த துப்பாக்கிப்பிரயோகம் தொடர்பில் நேற்று மாலை ஒருவர் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கிப்பிரயோகத்தை நடாத்திவிட்டு தப்பிச்சென்ற குறித்த நபர் புத்தளம் பாலாவி பகுதியில் கைது செய்யப்பட்டார்.
பாதாள உலகக் குழுவின் தலைவர் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட சம்பவம் தொடர்பில் மொஹமட் அஸ்மன் செப்ரிடீன் என்பவரே நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிசார் அறிவித்தனர்
எனினும் சந்தேகநபரின் பெயர் தொடர்பில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று பாராளுமன்றத்தில் தெளிவுப்படுத்தினார்.
புத்தளம் பாலாவி பகுதியில் நேற்று கைது செய்யப்பட நபர் சமிந்து டில்ஷான் பியுமங்க கன்டனாராச்சி என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
சந்தேகநபர் கடந்த சில வாரங்களாக நடாத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டவுடன் மொஹமட் அஸ்மன் சப்ரிடீன் என்ற ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு அறிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அறிவிப்பிற்கு அமைய கைது செய்யப்பட நபர் வேறு, ஊடகப் பேச்சாளரால் குறிப்பிடப்பட்ட பெயர் வேறு என்பதை உறுதிப்படுத்துமாறு இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மொஹமட் அஸ்மன் செப்ரிடீன் என்பவரின் சகோதரரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அறிவிப்பால் தங்களுக்கு சமூகம் சார்ந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதாள உலகுக் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்ய சுமார் ஒன்றரை கோடி ரூபா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Link: https://namathulk.com