வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விதிகளை மீறி செயற்படும் சிகை அலங்கார நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண அழகுநிலைய சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
ஒரு சில சிகை அலங்கார நிலையங்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறி செயற்படுவது தொடர்பில் ஏற்கனவே ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதற்கு அமைவாக இந்த கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, உள்ளூராட்சிமன்றங்களால் உரிமம் வழங்கப்படும்போது உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் சிகை அலங்கரிப்பு நிலையங்கள், சலூன்கள் , அழகுக்கலை நிலையங்களை நடாத்திச் செல்வதை முறைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல், கண்காணிப்பு செய்தல் மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான நியமத்துணைவிதிகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆண்டும் உரிமம் வழங்கப்படுவதாக உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இந்த நியமத்துணை விதியின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி வெட்டுதல் கூட எவ்வாறு அமையவேண்டும் என தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதால் அதற்கு அமைவாகவே அனைத்து சிகை அலங்கார நிலையங்களும் செயற்பட முடியும் என ஆளுநரும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நியமத்துணைவிதியை மீறும் சிகை அலங்கார நிலையங்கள் தொடர்பில் அழகு சங்கங்கள் அந்தந்த உள்ளூராட்சிமன்றங்களுக்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் குறிப்பிட்ட ஆளுநர், அதற்கமைவாக அத்தகை சிகை அலங்கார நிலையங்களின் உரிமத்தை உள்ளூராட்சிமன்றங்கள் எதிர்காலத்தில் இரத்துச் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், சிகை அலங்கார நிலையங்கள் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றையும் வழங்கினார்.
அந்த இலக்கத்துக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டால், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஊடாகவும் சோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
மேலும், சட்டவிரோத செயற்பாடுகள், இடம்பெறுவதாக நம்பப்படும் சிகை அலங்கார நிலையங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக பொலிசாராலும் விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com