வடக்கில் முடக்கப்பட்ட பன்றிப் பண்ணைகள் – வெளியான காரணம்

Aarani Editor
1 Min Read
பண்ணைகள்

வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி – பளை மற்றும் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேசங்களில் காணப்படும் 5 பன்றிப்பண்ணைகளில் ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி பன்றிகள் பல உயிரிழந்துள்ளதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் எஸ்.வசீகரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

மேற்படி ஐந்து பண்ணைகளிலும் பன்றிகளின் குருதிமாதிரிகள் பெறப்பட்டு பேராதனை விலங்கியல் ஆராய்ச்சி நிலையத்தால் நோய் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் மாகாணப்பணிப்பாளர் கூறினார்.

அதனை தொடர்ந்து குறித்த பண்ணைகளை உடனடியாக மூடி , பண்ணையின் சகல நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு பண்ணைகள் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கடந்த மூன்றுதினங்களுக்குள் மூடப்பட்டதாக மாகாணப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

ஆபிரிக்க பன்றிக்காய்சலானது மனிதரில் நோயை ஏற்படுத்தாத போதும் பன்றிகளில் மிக வேகமாகப் பரவி அவற்றில் பல இழப்புக்களை ஏற்படுத்தக்கூடிய நோயாகும்.

அதேவேளை நோயுற்ற பன்றிகளின் நேரடி தொடுகை மூலமாக மட்டுமன்றி மனித உடல், உடை மற்றும் வாகனங்கள் ஊடாகவும் வேறு பண்ணைகளில் நோய் பரவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் நோய்தொற்று கண்டறியப்பட்ட சகல பண்ணைகளையும் தற்காலிகமாக மூடி பண்ணை நடவடிக்கைகளை முடக்கி வைப்பதற்கு திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *