பெண் வைத்தியர் விவகாரம்: நீதியை நிலைநாட்டுமாறு மன்னார் மாவட்ட பெண்கள் வலையமைப்பு கோரிக்கை.

Ramya
By
1 Min Read
கோரிக்கை

அனுராதபுர போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியருக்கு, இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவ சிப்பாயால் கத்தி முனையில் இழைக்கப்பட்ட உடல் ரீதியிலான வன்முறையை கண்டித்து மன்னார் மாவட்ட பெண்கள் அமைப்பு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பெண் வைத்தியர் மீது மேற்கொண்ட உடல் ரீதியிலான வன்முறை என்பது, ஒரு தனிமனிதன் மீதான வன்முறையல்ல, மாறாக இது இலங்கையில் வாழுகின்ற ஒட்டு மொத்த பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு, நம்பிக்கை மீது இழைக்கப்பட்ட குற்றச்செயலாகும் என குறித்த கண்டன அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கொடூரமான செயலானது, பெண்கள் நலிந்த நிலையில் இருக்கின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்டுவதாக அறிக்கை கூறுகின்றது.

எனவே, இந்த குற்றச்செயலை புரிந்த நபர் சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென மன்னார் மாவட்ட பெண்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் எவ்வித காலத்தாமதமோ, இணக்கப்பாடோ இல்லாமல், உடனடியாக நீதி நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் குறித்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பெண்களுக்கான பாதுகாப்பு நீதி என்பன முதன்மைப்படத்தப்பட வேண்டுமெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இராணுவத்திலிருந்து தப்பியோடி வந்தவர்களே நாட்டில் நடைபெறும் சமகால குற்றங்களுக்கு காரணமாக உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இழிவான செயல், ஆயுதம் தாங்கி பாதுகாப்பு பணியில் ஈடுப்பவர்களின் பொறுப்புடைமையை கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடு எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, அரசாங்கம் தப்பியோடிய இராணுவ சிப்பாய்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மன்னார் மாவட்ட பெண்கள் வலையமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *